சடங்குகளும் சம்பிரதாயங்களும்.
நமது வாழ்வில் நாம் பிறந்து மனமாற சிந்திக்கத் துவங்கும் பால்ய வயதுக்கு முன்னதாகவே நம் குடும்பத்தினரைப் பார்த்து சில செயல்களை இமிடேட் செய்யத் துவங்குகிறோம்.
பள்ளிப் பருவத்தில் விபூதி வைத்துக் கொள்வது, பேப்பரை மிதித்தால் கன்னத்தில் போட்டுக் கொள்வது, குடும்ப பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, வீட்டு விலக்கான பெண்களிடம் மேலே பட்டுவிடாமல் நடப்பதும், காப்பி, தண்ணீரை வாயில் படாமல் குடிப்பது, கோழி சாப்பிட்டாலும் சேவல்கறி தின்னாதது, செவ்வாய், சனி சைவம், இறந்தோரை புதைப்பது, எரிப்பது அதில் பல வகை புதைப்பு, பலவகை எரிப்பு என.
இவற்றுக்கெல்லாம் காலப்போக்கில் நியாய, அநியாய காரணங்கள் உணர்ந்தாலும் அனிச்சையாய் சிலது( ரு)ம், பயத்தில் சிலது( ரு)ம், பெருமையாய் சிலது( ரு)ம், அடையாளத்துக்காக சிலது( ரு)ம், பின்பற்றுகின்றதை நாம்பார்க்கிறோம்.
பகுத்தறிவு முற்போக்கு பேசும் பலரே இறந்தால் எளிதாக எலக்ட்ரிக் இடுகாட்டில் எரிக்காமல் சம்பிரதாயத்திற்காக சமாதிகட்டுவதும், கட்சி/ அரசு இடத்தை ஆக்ரமிக்க புதைப்பதும் கண்கூடு.
ஓட்டுக்காகவும், குறுங்குழுவில் கெத்துகாட்டவும் முற்போக்கு நாத்திகம் பகுத்தறிவு பேசுவதும் சொந்த அக்கா செத்துவிட்டா படையல் போட்டு திருநீற்றுடன் சாவுவிருந்து சாப்பிடுவதும் நாம் கண்ட நடிப்புச் சுதேசிகள்.
குறிப்பிட்ட கோவிலுக்குள்சென்றால் ஆட்சி போய்விடும் என்று பட்டுக்கு தோஷம் தாக்காது என அதிசயமாக பட்டு வேட்டி கட்டி கோவிலுக்கு போன பகுத்தறிவு பகலவன்கள் தான் ஊரை சனாதனி என்று சாடுவது.
காலமெல்லாம் பகுத்தறிவு எனப் பேசி கடைசி காலத்தில் தேவாரம்/ திருப்புகழ் பிரசங்கம் செய்த ராசா ராமர்கள் உண்டிங்கு.
ஒரு சமயத்தில் தொப்பி போட்டு கஞ்சி குடித்து உறவு பேணுவது இன்னொரு சமயத்தில் திருநீறை மறுப்பது என பகுத்தறிவு தளத்தில் இயங்கும் போலிகள் தான் இங்கு சடங்குகள் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள்.
சமாதிகளில் போய் தயிர் வடைகளும், ஜண்டை மேளங்களும், பால் ஊற்றுதலும் தூள் பறக்க சாமானியனது நம்பிக்கையை ஏளனம் செய்து தகர்த்து ஆதாயம் பார்ப்பார்கள்.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒரு குடியின், இனத்தின் , சமூகத்தின் அடையாளம். உணவைப் போல் மொழியைப் போல் மற்றொரு அடையாளம்.
உடன்கட்டை ஏறுதல் இளகி கைம்மை நோன்பாகியது. கைம்மையும் எளிமைப்பட்டு தாலி, குங்குமம் தவிர்த்லாகியது. வரும் காலங்களில் அவசியமானால் மறுமணமும் ஏற்கப்படலாம்.
நாம் வாழும் காலத்து துயரங்கள் கடந்த காலங்களில் சாதாரணமாகத் தோன்றியது போல இக்கால பிரச்னைகள் வருங்காலத்தில் பூதாகாரமானதாக உணரப் படலாம்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; காலவகையினானே!" என்று மரபை மாறுதலுக்குட்பட அனுமதிப்பதை எந்த நூலில் கூறியிருக்கிறார் தெரியுமா? கடுமையான மரபை விளக்கும் இலக்கண நூலாகிய நன்னூலில் என்பதே நம்முன்னோர் வாழ்வைப் புரிந்து கொண்டதின் ஆச்சர்யமான அளவு கோல்!
சங்க காலத்திலேயே கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர், ஆளில் பெண்டிர், உயவல் பெண்டிர், கழிகலமகளிர், கழிகல முகடூ, பருத்திப்பெண்டிர், என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.
புறநானூற்றிலேயே..வண்டிச் சக்கரத்தில் அமர்ந்த பல்லிபோல வாழ்க்கையை அவரே உலகமென கழித்துவிட்டேன். அவருடைய ஈமத்தாழியில் எனக்கும் இடம் இருக்குமாறுபெரிதாக வனைவாயாக.. கலம் செய் கோவே! என்ற பாடல் நெகிழ வைப்பது.
சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
829 views
Subscribe
Mani Manivannan's profile photo
Mani Manivannan
unread,
3/18/14
to tamilmanram
puthu.thinnai.comhttp://puthu.thinnai.com/?p=17458
சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள் | திண்ணை
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar...@gmail.com
கைம்பெண்
சங்ககாலப் பெண்கள் திருமணத்திற்குப்பின் பிறந்த வீட்டில் பெற்றோருடன் உடனுறைந்து வாழவில்லை. கணவனுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவரைப் பேணும் பண்புடையவர்களாக விளங்கினர். கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று வழங்கினர். கணவன் இறந்த பின்னர் பெண்கள் கணவனுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அதைவிடப் பெண்கள் கைமை நோன்பு நோற்று தமது வாழ்க்கையைக் கழித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கைம்மைக் கோலம்
வளையல்களைக் களைதல்
பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது. கணவனை இழந்து வாழும் பெண்கள் மங்கலப் பொருள்களை நீக்கி வாழ வேண்டும். வளையல் அணிதல் கூடாது என்று சமுதாயம் வலியுறுத்தியது. இதனை,
‘‘வாழைப் பூவின் வளைமுறி சிதற’’ (புறம்., 237.10-12)
‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி’’ (புறம்.,238.5-7)
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வெளிமான் என்ற மன்னன் இறக்க அவனுடைய உரிமை மகளிர் தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தனர். இதனால் அவர்களது கைகளின் கவின் குறைந்து பார்ப்பதற்கு வெறுமையாகக் காட்சியளித்தன என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகின்றார்.
அணிகலன்களைக் களைதல்
கணவனுடன் வாழ்கின்ற பெண்களே பல்வேறு அணிகலன்களை அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் எந்தவிதமான அணிகலன்களையும் அணிதல் கூடாது. கரிகாற் பெருவளத்தான் மறைந்தான். அவனால் ஆதரிக்கப்பெற்ற அனைவரும் வருந்தினர். அவனது உரிமை மகளிர் தாங்கள் அணிந்திருந்த அனைத்து அணிகலன்களையும் களைந்து பெருந் துயருற்றனர். இதனை அவனது இறப்பினைக் கண்டு கலங்கிய கருங்குழலாதனார் எனும் புலவர்,
‘‘பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்து கட்டுஅழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே’’’ (புறம்.,224,15-17)
என்று துயருற்றுப் பாடுகின்றார்.
கூந்தல் களைதல்
பெண்களுக்கு அழகு தருவது கூந்தல். அக்கூந்தலிலேதான் பெண்கள் மலரணிந்து மகிழ்ந்தனர். கணவன் இறந்து படவே தமக்கு அழகு தந்த கூந்தலைப் பெண்கள் களைந்தார்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியபோது,
‘‘மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள்நுதல் மகளிர் கைம்மைகூர
அவிர் அறல் கடுக்கும் அம்மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே’’ (புறம்.25:10-14)
என்று பாடுகின்றார். நெடுஞ்செழியனே நீ படையெடுத்துப் பகைவரை அழிப்பதால், பகைவர்களது மனைவியர் கைம்மையை மேற்கொள்ள வேண்டி விளங்கித் தோன்றும் ஆற்றின் கரிய தலைமுடியினைக் களைந்தார்கள் என்று கைம்பெண்கள் கூந்தலைக் களைந்ததை எடுத்துரைக்கின்றார்.
கைம்பெண்களின் உணவும் அவர்களது நிலையும்
கணவனை இழந்த பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களை அழகுறுத்திக் கொள்வதும் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த இழிந்த வாழ்வு வாழ்ந்தனர். தமது கணவன் இருந்தபோது மகிழ்வுடன் வாழ்ந்த மகளிர் கணவன் இறந்த பின்னர் அனைத்து இன்பங்களையும் துறந்து வாழ்ந்தனர். இதனை,
‘‘குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனவைியொடு இனியே
புல்லென்றனையால் வளம் கெழுதிருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனிந்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே’’ (புறம்.250:3-4)
என்ற தாயங்கண்ணியாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.
தலைவனை இழந்து, பொலிவிழந்து காணப்பட்ட இல்லத்தைப் பார்த்த புலவர், மாளிகையே, புதல்வருடைய தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தான். தாளிக்கும் ஓசை மிகுந்த திரண்ட துவையலுடன் கூடிய உணவு இரவலரை மேற்செல்லாது தடுத்துத் தன்னிடம் வருமாறு செய்யும் வாயிலினையும் தன்னால் காக்கப்பெறுவோரின் கண்ணீரைத் தடுத்து மாற்றிய குளிர்ந்த மணமுடைய பந்தலையும் உடையதாய் முன் விளங்கினை. அத்தகைய இடத்தில் மயிரைக் களைந்தும் சிறிய வளையலை நீக்கியும் அல்லியரிசியாகிய உணவுண்ணும் மனயைிவியுடன் நீ இருந்து பொலிவழிந்தாய் என்று வருந்திப் பாடுகின்றார். இதில் கைம்பெண்களின் நிலைசித்திரிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
கைம்பெண்களின் அழகிழந்த நிலை
கணவனை இழந்த பெண்கள் கூந்தல், வளையல், அணிகள் ஆகியவற்றை இழந்து பொலிவிழந்து காணப்பட்டனர். அவர்களின் அழகற்ற நிலையானது அழகற்ற இல்லம்போன்று காணப்பட்டன. இத்தகைய கைம்பெண்களின் அவல நிலையை,
‘‘நிரை இவன் தந்து, நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பி
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போலப்
புல்லென்றனையால் பல்லணி இழந்தே’’(புறம். 262)
என்று வாள்போரில் வீழ்ந்தவனைப் பார்த்து யாழ்ப்பாணர் வருந்தி ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். இப்பாடல் கைம்பெண்களின் வாழ்க்கைநிலையை தெளிவுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது.
கைம்மைத் துயர்
பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு பெருந்துயருற்றாள். தன் கணவன் இறந்த பின்னர் உயிர்வாழ்வதா? என்று கருதி தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். அப்போது கைம்மைத் துயர் எத்தன்மையது என்பதை,
//‘‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆக
பரற் பெய்பள்ளிப் பாய்இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுகதில்ல. எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென’’ (புறம்.,246)
என்று எடுத்துரைக்கின்றாள்.//
உயிர்களுக்கு மட்டுமல்ல சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஃபிட்டஸ்ட் ஆஃப் தி ஸர்வைவல் பொருந்தும்.